Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பழனி: உலகப்புகழ்பெற்ற சித்தனாதன் பஞ்சாமிர்த குழுமத்தினர் வரிஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தும், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. எனவே வரி ஏய்ப்பை கண்டறிய வருமானவரித்துறையினர் புதிய நடைமுறையை கையாண்டிருக்கிறது.
பழனி சித்தனாதன் பஞ்சாமிர்த குழுமம் தொடர்புடைய 20 இடங்களில் வருமானவரித்துறை இரண்டு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வரவு செலவு கணக்கு எதுவும் இல்லாமல் வாய்மொழியாக தொழில்நடத்தியதால் வரி ஏய்ப்பை கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், அந்த சுணக்கத்தை தவிர்க்கும்வகையில் வருமானவரித்துறையினர் புதிய நடைமுறையை கையாண்டுவருகின்றனர்.
நாளைக்கு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை வருவாய் இருக்கும்நிலையில், ஆண்டு வருமானம் 50 ஆயிரம் என கணக்கு காட்டியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வரி ஏய்ப்பு நடந்ததை உறுதிப்படுத்திய நிலையில், ஆவணங்கள் இல்லை என்பதால், இதையடுத்து சித்தனாதன் குடும்பத்தின் வாரிசுகள் 200 பேரிடமும் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று தலைமுறையாக பஞ்சாமிர்த விற்பனையில் ஈடுபட்டுவரும் குடும்பத்தினர் மறைக்கப்பட்ட வருவாயை தங்கத்தில் முதலீடு செய்திருப்பதும் வருமானவரித்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சித்தனாதன் குடும்பத்தினரின் மொத்த தங்க கையிருப்பைக்கொண்டு வரி ஏய்ப்பை முடிவு செய்ய வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.
விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றிகான மூலப்பொருட்களை சப்ளை செய்தவர்களிடமும் விசாரணை தொடர்வதாக அதிகாரி கூறியுள்ளனர்.
பிரபலமான பஞ்சாமிர்தக்கடை குழுமத்தில் நடக்கும் இந்த வருமானவரித்துறை சோதனை பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.